Saturday 11th of May 2024 01:42:00 PM GMT

LANGUAGE - TAMIL
-
அவுஸ்திரேலியாவில் தொடரும் மழை; சிட்னிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் தொடரும் மழை; சிட்னிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை!


அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணங்களில் கடந்த தசாப்தங்களில் இல்லாதளவு ஏற்பட்டுள்ள மிக மோசமான மழை- வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவிப்போரை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் நியூசவுத்வேல்ஸ் தலைநகர் சிட்னிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு அவுஸ்திரேலியாவில் வெள்ளம் சூழ்ந்த சுற்றுப்புறங்களின் கூரைகளில் இருந்து சிக்கித் தவித்த மக்கள் விமானங்கள், இராணுவ ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, சிட்னியில் கடும் மழை, வெள்ளத்துடன் கூடிய மோசமான காலநிலை நிலவி வரும் நிலையில் அங்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஒருவர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவுஸ்திரேலிய மழை வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பெரு வெள்ளத்தில் அடித்துக் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் நேற்று சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையின் சில பகுதிகளில் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் உள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள லிஸ்மோர் நகரத்தில் ஆறு பெருக்கெடுத்துள்ளதால் ஏராளமான குடியிருப்புவாசிகள் செல்லப்பிராணிகளுடன் வீடுகளின் கூரைகள் மீது ஏறியிருக்கும் நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்படுகின்றனர்.

அத்துடன், லிஸ்மோர் வாசிகள் நூற்றுக்கணக்கானவர்கள் கார்களுடன் சிக்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு அடித்துச் செல்லப்பட்ட 50 -க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணங்களில் மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவாக இது பதிவாகியுள்ளது.

இதுவரை வெள்ளத்தில் சிக்கிய 1,000 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். 6,000-க்கும் மேற்பட்டவர்கள் உதவி கோரி அழைப்பு விடுத்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் டொமினிக் பெரோட்டட் தெரிவித்தார்.

மாகாணத்தில் 40,000 பேர் வரையானோரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 300,000 பேர் எந்நேரமும் வெளியேறுவதற்கான எச்சரிக்கையின் கீழ் உள்ளனர் எனவும் பெரோட்டெட் கூறினார்.

மாகாணம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மழை, வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒரு வாரகாலமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE